Wednesday, July 25, 2012

மனிதன் தான் வரலாற்றைப் படைக்கிறான்.

மனிதன் இன்று தான் செய்யும் செயல்கள் தான் நாளைய வரலாறு. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் வரலாற்றில் இடம் பிடிப்பது எந்த வகையான செயல்கள்  என்று பார்ப்போம்.   
மக்களின் செயலை ஏதாவது ஒரு வழியில் தூண்டுவது எது ?
அது மாபெரும் தலைவர்களுடைய மன உறுதியின் விளைவா அல்லது அவர்களுடைய சிந்தனையில் தோன்றிய மேன்மையான கருத்துக்களின் விளைவா? 
அறிஞர்கள் ஒரு நாட்டை ஆட்சி செய்தால் மட்டுமே அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சி நிரம்பியவர்களாக இருப்பார்கள் என்று ஒரு காலத்தில் பலர் நினைத்ததுண்டு. 
ஆனால் வரலாற்று எதார்த்தம் இதை நிராகரித்தது.தாங்கள் பங்கெடுக்கின்ற போராட்டங்களின் மூலம் தங்களுக்கு இத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்தால் மட்டுமே பெருந்திரளான மக்கள்,சமூகத்தை மாற்றுகின்ற இயக்கங்களில் தீவிரமாகப் பங்கெடுப்பார்கள். மிகவும் சிறப்பான கருத்துக்கள் கூட போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஒரு நபரை தூண்ட முடியாது; அதற்கு அப்போராட்டத்தின் மூலம் தனக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை அவர் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.     ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட நோக்கங்களுக்குப் பாடுபடுகிறார் என்றாலும் பெரிய சமூகக் குழுக்கள் பொதுவான அக்கரைகளைக் கொடிருக்கின்றன;ஏனென்றால் அக்குழுக்களில் உள்ள தனிநபர்கள் சமூகத்தில் ஒரே இடத்தை வகிக்கிறார்கள், உதாரணமாக, முதலாளித்துவ சமூகத்தில் எல்லாத் தொழிலாளர்களும்  பொதுவான அக்கரைகளைக் கொண்டிருக்கிறார்கள்;ஏனென்றால் அவர்களில் எவரும் எந்த உற்பத்திச் சாதனங்களையும் உடைமையாகக் கொண்டிருக்கவில்லை. ஆகவே அவர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு முதலாளியிடம் உழைத்து வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கிறது. அவர்களுக்கு கூலியைக் கொடுத்துவிட்டு  முதலாளிகள் லாபத்தை அடைகிறார்கள். விவசாயிகளுக்கும் இது பொருந்தும். 
சமூக அமைப்பில் அவர்கள் வகிக்கின்ற இடத்தினால் அவர்களுடைய பொதுவான அக்கறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆகவே, வரலாற்று ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட சமூக உறவுகளின் அமைப்பில் தாங்கள் வகிக்கின்ற இடத்தினால் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்ற பெரிய மக்கட் குழுக்கள், வர்க்கங்கள் என்று சொல்லப்படுகின்றன. 
பொதுவான வர்க்க நலன்களுக்கான போராட்டமே மனித சமூகத்தின் நீண்ட வரலாற்றுக் காலத்தில் அதன் வளர்ச்சியை நிர்ணயித்திருக்கிறது. அதனால்தான் மார்க்சியத் தத்துவம் வர்க்கப் போராட்டமே வரலாற்றின் பிரதான இயக்கு சக்தி என்று முடிவு செய்திருக்கிறது. வரலாற்றின் அடிப்படையில் மனிதன் முழு மனிதனாக மாறியதற்கு உழைப்புதான் காரணம் என்று நம் தலைவர் கார்ல் மார்க்ஸ் சொல்லி இருக்கிறார். அந்த உழைப்பினால்தான் வரலாற்றையும் படைக்கிறான் மனிதன். 

No comments:

Post a Comment